Wednesday, June 4, 2025
மாவட்ட செய்திகள்

சித்திரை பட்டம் நடவுக்கு நிலக்கடலை விதை வழங்க நடவடிக்கை தேவை

மானாவாரி நிலங்களில் நிலக்கடலை விதைப்புக்கு விதை விற்பனை செய்ய வேளாண் துறை முன்வர வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் ரோட்டிற்கு மேற்கு பக்கம் லோயர்கேம்பில் ஆரம்பித்து தேவாரம் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி நடைபெறும். சின்னமனூர் வட்டாரத்திலும் மானாவாரி காடுகளில் நிலக்கடலை சாகுபடி செய்வார்கள். தற்போது கோடை மழை பெய்து சாகுபடிக்கு ஏற்ற சூழல் உள்ளது.

இச் சூழலில் வேளாண் துறை விதை நிலக்கடலை விற்பனை செய்ய விவசாயிகள் கோரியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலக்கடலை சாகுபடி பரப்பு மிகவும் குறைந்து விட்டது. விதை கடலை விலை அதிகமானதும், பராமரிப்பு செல்வு, பறிப்பு கூலி அதிகரித்ததும் காரணமாக இருந்தது .

இந்நிலையில் தற்போது சூழல் நன்றாக உள்ளது. எனவே விதை கடலை விற்பனை செய்ய வேண்டும்.

நிலக்கடலை சாகுபடியை ஊக்குவிக்க கம்பம் வேளாண் துறை விதைக் கிராமம் திட்டத்தில் விதை நிலக்கடலை விற்பனை செய்கிறது.

ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய பருப்பு என்றால் 45 கிலோவும், தொழியுடன் என்றால் 60 கிலோவும், ஒரு கிலோ விலை ரூ.96 அதில் மானியம் ரூ.36 என்றும் கடந்தாண்டு வழங்கினார்கள்.

ஆனால் இந்தாண்டு இதுவரை விதை கடலை விற்பனை தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

கம்பம் வேளாண் துறை வட்டாரங்களில் விசாரித்த போது, தற்போது சித்திரை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யலாம். வேளாண் அலுவலகங்களில் விதை கடலை இருப்பு உள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு எக்டேருக்கு 200 கிலோ வரை தரப்படும். தற்போது விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.120 வரை உள்ளது. மானியம் ரூ.40 வரை இருக்கும். இன்னமும் அரசிடம் இருந்து மானிய விபரம் வரவில்லை. விரைவில் நிலக்கடலை விற்பனை துவங்கும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *