ஆக., 20 வரை மக்களுடன் முதல்வர் முகாம் 31 இடங்களில் நடக்கிறது
மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் நாளை லட்சுமிபுரத்தில் துவங்குகிறது. இந்த முகாம் ஆக., 20 வரை 31 இடங்களில் நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகளில் கடந்தாண்டு டிச.,ல் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் 83 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் நாளை முதல் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 4,5 ஊராட்சிகளை இணைத்து ஒரு இடத்தில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாளை துவங்கும் இந்த முகாம் ஆக.,20 வரை நடக்கிறது. முகாம் காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும். முகாமில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனிப் தலைமையில் நடக்கிறது.
இதில் மின்வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, மாற்றத்திறனாளிகள் நலத்துறை, போலீஸ், சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண், தோட்டக்கலை, மீன்வளம், கால்நடைத்துறை உள்ளிட்ட 15 துறைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம். மனுக்கள் வழங்கும் போது அதற்கான ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்.
என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
நாளை லட்சுமிபுரம் ருக்மணி திருமண மண்டபத்தில் முகாம் துவங்குகிறது. இந்த முகாமில் வடபுதுப்பட்டி, ஜல்லிபட்டி, சருத்துப்பட்டி, லட்சுமிபுரம் ஊராட்சி பொதுமக்கள் மனுக்கள் வழங்கலாம்.