பரவும் வைரஸ் காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை அவசியம்
கூடலுாரில் வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதால் கொசுக்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கூடலுாரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி கிடக்கிறது. கூலிக்காரன் பாலம் ஓடை, சுல்லக்கரை ஓடைகளில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளன. கொசுக்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக குவிந்துள்ளனர்.
பள்ளிகளுக்கு முன் தேங்கியிருக்கும் கழிவு நீரால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவி வருகிறது. காய்ச்சல் அதிகமாகி டெங்கு பரவும் வாய்ப்பு ஏற்படுவதற்கு முன் நகராட்சி நிர்வாகம் ஆங்காங்கே தண்ணீரை தேங்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுகாதாரத் துறை சார்பில் முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.