மாதச்சீட்டில் முதலீடு செய்து திரும்ப கிடைக்காதவர்கள் புகார் அளிக்கலாம்;
மாதச்சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகாரளிக்கலாம்.’ என, தேனி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., மணிமாறன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி பொம்மையக் கவுண்டன்பட்டி பஜார் தெருவில் 2020 முதல் 2023 வரை மலர்விழி, ராஜாமணி, தமிழரசி, ஜெயப்பிரியா ஆகியோர் ஒன்று சேர்ந்து பதிவு செய்யப்படாத மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கினர். இவர்கள் 4 வகையான சீட்டுத்திட்டங்களை நடத்தி உறுப்பினர்களாக பதிவு செய்வோரிடம் முதலீடுகளை பெற்றுள்ளனர். இதற்கு இரட்டிப்புத் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறினர். ஏராளமானோர் இத்திட்டங்களில் இணைந்தனர். பல லட்சம் வசூலானது. முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்புத் தொகை வழங்காமல் சீட்டு நடத்தியவர்கள் ஏமாற்றினர். இதுகுறித்து வாழையாத்துப்பட்டி ராம்குமார் மனைவி சரண்யா புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் இவர்களிடம் பணம் செலுத்தி, திரும்ப கிடைக்காத பொது மக்கள் உரிய ஆவணங்களுடன் தேனி அல்லிநகரம் ரத்தினம் நகர் அழகுநாச்சியார்புரத்தில் உள்ள தேனி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் அளிக்கலாம். இப்புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளார்.