Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

வெப்ப அலையால் மகசூல் பாதித்த மாந்தோப்புகள் கணக்கெடுப்பு: தோட்டக்கலைத்துறை பேராசிரியர்கள் குழு ஆய்வு

காலம் தவறி பெய்த பருவ மழை, கோடையில் வீசிய வெப்ப அலையால் மாந்தோப்புகளில் மகசூல் பாதித்து விவசாயிகள் நஷ்டமடைந்தனர். மாந்தோப்புகள் கணக்கெடுக்கும் பணியினை தோட்டக்கலைத்துறையினர் மற்றும் பேராசிரியர்கள் துவங்கி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம், தேனி வட்டாரங்களில் 9800 எக்டேரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்குஇமாம்பசந்த், பங்கனபள்ளி, செந்துாரம், அல்போன்சா, கல்லாமை, காசா உள்ளிட்ட ரகங்கள் அதிகம் சாகுபடியாகிறது.

பெரியகுளம், போடி நீர்வளம் மிகுந்த பகுதிகளில் 30 சதவீதமும், கம்பம், தேனி பகுதி மானாவாரியில் 70 சதவீதம் மா சாகுபடியாகிறது. நீர்வளம் மிக்க பகுதியில் எக்டேருக்கு சாராசரியாக 6 டன்னும், மானாவாரியில் சராசரியாக 3 டன் வரை மகசூல் கிடைக்கும். மாவட்டத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் மாங்காய் மகசூல் கிடைக்கும். மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், அதிகளவில் கேரளாவிற்கு அனுப்படும்.

மா மரங்களில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பூ பூத்து ஏப்ரல் இறுதியில் இருந்து ஜூலை வரை காய்கள் வரத்து ஏற்படும். இந்த ஆண்டு ஜன., பிப்., மாதங்களில் மழை அதிகம் பொழிந்தும், காலநிலை மாற்றத்தால் மாம் பூக்கள் சரியாக பூ பூக்கவில்லை. மா மரங்களில் 60 சதவீதம் வரை பூ பூக்கவில்லை.அதனால் எதிர்பார்த்த மாங்காய் காய்ப்பு இல்லை.

இதனால் விவசாயிகள் வருவாய் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். பல்வேறு விவசாய அமைப்புகள் நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்து வற்புறுத்தினர்.

தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ‘காலநிலை மாற்றம், வெப்ப அலை காரணமாக இந்த ஆண்டு மா சாகுபடி பாதித்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரியுள்ளனர்’ என்றனர்.

இந்நிலையில் தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா தலைமையில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி பேராசிரியர்கள் முத்தையா, ராஜமாணிக்கம், விஜயசாமுண்டீஸ்வரி ஆகியோர் கொண்ட குழு பாதிக்கப்பட்ட மாந்தோப்புகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாந்தோப்புகள் பரப்பளவு பற்றியும், நிவாரணம் பற்றியும் அரசிற்கு அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்க உள்ளனர். என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *