அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளிடம் ஒப்படைப்பு
கூடலூர் அருகே தம்மணம்பட்டி அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீடு ஒப்படைப்பு விழா நடந்தது.
கூடலுார் அருகே தம்மணம்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 264 அடுக்குமாடி குடியிருப்புகளும், 36 தரைத்தள குடியிருப்புகளும் என மொத்தம் 300 குடியிருப்புகள் ரூ.29.52 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு குடியிருப்புக்கும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ.2.34 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 15 பயனாளிகளுக்கு வீடு ஒப்படைக்கும் விழா ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமையில் நடந்தது.
கலெக்டர் சஜீவனா பயனாளிகளுக்கு உத்தரவு நகலை வழங்கினார். கூடலுார் நகராட்சி தலைவர் பத்மாவதி, கமிஷனர் காஞ்சனா, தி.மு.க., நகர செயலாளர் லோகந்துரை, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி, நகர்ப்புற மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் மாடசாமி, உதவி நிர்வாக பொறியாளர்கள் ராஜா, வளர்மதி, உதவி பொறியாளர்கள் சிவப்பிரியா, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.