Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

பயன்பாட்டில் இல்லாத ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் திரும்ப அனுப்ப முடிவு

தேர்தல் கமிஷன் பாதுகாப்பில் உள்ள பயன்பாடு இல்லாத பழைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தனியார் நிறுவனத்திற்கு திரும்ப அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2008- -2009ம் ஆண்டுக்கான பழைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி தாலுகா பாப்பம்மாள்புரம், சக்கம்பட்டி பகவதி அம்மன் கோயில் சமுதாயக்கூடங்களில் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இந்த மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களுக்கான காலக்கெடு முடிந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை திருச்சி பெல் நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஏற்பாட்டில் ஆண்டிபட்டி வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான விபரங்களை ஸ்கேன் செய்து வருகின்றனர்.

அலுவலர்கள் கூறியதாவது: கடந்த உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வி.வி.பேட்டுடன் இணைப்புகள் இல்லாதது.

கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் தனித்தனியாக ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் இந்த இயந்திரங்களை பயன்படுத்த இயலாது. எனவே பெல் நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *