நகராட்சி பகுதியில் கைவிடப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புது கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்தாண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம் பணி துவங்கியது. துவங்கிய வேகத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன.
புதிதாக பொறுப்பேற்று உள்ள கமிஷனர் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் நகரின் வளர்ச்சிக்கும், போக்குவரத்திற்கும் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் மிகவும் இடையூராக உள்ளன. கடந்தாண்டு தீபாவளிக்கு முன்னர் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்ற வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து அல்லிநகரம் பகுதியில் நகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. ஆனால், அரசியல் அழுத்தம், துறைகள் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் முடங்கியது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் செங்கல் சுவர்கள் வைத்துவிட்டனர். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிதாக பொறுப்பேற்று உள்ள நகராட்சி கமிஷனர் ஏகராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.