குடியிருப்பு பகுதியில் படையப்பா ; வனப்பகுதியில் விரட்ட கோரிக்கை
தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக வலம் வரும் படையப்பா ஆண் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் மிகவும் பிரபலமான படையப்பா ஆண் காட்டு யானை கடந்த இரண்டு மாதங்களாக குண்டளை, சிட்டிவாரை, அருவிக்காடு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் சுற்றித் திரிகின்றது.
அப்பகுதியில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் படையப்பா, தொழிலாளர்கள் உப வருமானத்திற்கு சாகுபடி செய்துள்ள காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தி வருகிறது.
சேதம்
குண்டளை எஸ்டேட், ஈஸ்ட் டிவிஷனில் நேற்று முன்தினம் இரவு குடியிருப்புப் பகுதியில் நுழைந்த படையப்பா குமரேசன், சவுந்திரராஜன், முருகேசன், மைக்கேல்துரை ஆகிய தொழிலாளர்கள் சாகுபடி செய்த பீன்ஸ், முட்டைக்கோஸ் உட்பட காய்கறி, வாழை பயிரிடப்பட்ட தோட்டங்களை சேதப்படுத்தியது.
தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக வலம் வரும் படையப்பாவை வனத்துறை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.