Saturday, June 7, 2025
மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டி பகுதியில் ரயிலில் அடிபட்டு பலியாகும் மயில்கள்

மதுரை– போடி செல்லும் பயணிகள் ரயில் தினமும் காலை 9:30 மணிக்குள் ஆண்டிபட்டியை கடந்து செல்கிறது.

இதேபோல் போடி- மதுரை செல்லும் பயணிகள் ரயில் மாலை 6.30 மணிக்கு ஆண்டிபட்டியை கடந்து செல்கிறது. செவ்வாய், வியாழன், சனி மூன்று நாட்களும் சென்னையில் இருந்து போடி செல்லும் ரயில் காலை 9:05 மணிக்கும், இரவு 9:05 மணிக்கும் ஆண்டிபட்டியை கடந்து செல்கிறது. ஆண்டிபட்டி கணவாய் முதல் டி.சுப்புலாபுரம் சாமியார் மடம் வரை உள்ள பகுதி வனப்பகுதியை ஒட்டியதாக உள்ளது. நக்கலக்கரடு மலையை ஒட்டிய பகுதியில் மயில்கள் அதிக எண்ணிக்கையில் உலா வருகின்றன. சாமியார் மடம் அருகே ஆண்டிபட்டி வனச்சரக அலுவலகம் பின்புறம் உள்ள பகுதியில் காலை, மாலையில் விளை நிலங்களில் இரைக்காக மயில்கள் கூட்டமாக சென்று திரும்புவது வாடிக்கையானது. ரயில் வரும்போது பதட்டத்தில் சில மயில்கள் ரயிலில் குறுக்காக பறந்து அடிபட்டு பலியாகிறது. தண்டவாளத்தில் பலியாகும் மயில்கள் சிதைந்து விடுகிறது.

ரயில் மோதி தூக்கி எறிந்து இறக்கும் மயில்களை வழிப்போக்கர்கள் எடுத்தும் செல்கின்றனர். ரயில் வரும் நேரங்களில் மயில்கள் அதிகம் நடமாடும் பகுதிகளை கண்காணித்து அப்பகுதியில் வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி மயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *