மேகமலையில் சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
மேகமலையில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேகமலை புலிகள் காப்பகமாக மாறிய பின் வனத்துறையின் கெடுபிடி நியாயமானதாக இருந்தாலும், சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித இடையூறுகளும் செய்வதில்லை.
மாலை 5 மணியுடன் ஹைவேவிஸ் ரோடு மூடப்படுவதால், அதற்குள் திரும்ப அறிவுறுத்துகின்றனர்.
மேகமலை பகுதியில் சூழல் சுற்றுலாவிற்கு அனுமதிக்க வனத்துறை பரிசீலித்து வருவதாக கடந்தாண்டு தகவல் வெளியானது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய சூழல் சுற்றுலா இருக்க வேண்டும்.
பூங்கா, உட்கார இருக்கைகள், பயணத்திற்கு பேட்டரி கார்கள், மணலாறு அணையில் படகு சவாரி, ஒட்டல், தங்கும் விடுதி, டிரக்கிங் என பல வசதிகள் செய்தால் சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு இணையாக இங்கு வரத் துவங்குவார்கள். தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பகத்தில் இருப்பது போன்று சூழல் சுற்றுலாவை செயல்படுத்தலாம்.
அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வருவதாக கூறுகின்றனர். ஆனால் வனத்துறை உறுதி செய்யப்படவில்லை.
ஏற்கெனவே தமிழக அரசு மேகமலையை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது.
இருந்தபோதும் புலிகள் காப்பகமாக மாறியுள்ளதால், வனத்துறையின் கட்டுப்பாட்டில் தான் சுற்றுலா நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என வனத்துறை கூறுகிறது. சூழல் சுற்றுலாவை செயல்படுத்தினால் வனத்துறைக்கு நல்ல வருவாய் கிடைக்கும், வனப்பகுதிகளில் மேம்பாடு, வன உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இந்த நிதியை பயன்படுத்த முடியும்.
எனவே மேகமலை சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திட்டம் செயல்படுத்தினால் சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்க பூமியாக மேகமலை திகழும்.