ரூ.2.40 கோடி வருவாய் ஈட்டியதால் தேனி ரயில்வே ஸ்டேஷன் தரம் உயர்வு; கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்
தெற்கு ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் ஸ்டேஷன்களை தரம் உயர்த்தி பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் உள்ள 541 ரயில்வே ஸ்டேஷன்களில் தேனி ரயில்வே ஸ்டேஷன் தமிழ்நாடு அளவில் 99 வது இடத்திலும், போடி 104வது இடத்தை பெற்றுள்ளன. தென்னக ரயில்வே கோட்ட அளவில் தேனி 160வது இடத்திலும், போடி 169வது இடத்தை பெற்றுள்ளன.
தரம் உயர்வு:
தேனி ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு பயணச் சீட்டு விற்பனை மூலம் 24,898 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் ரூ.1 கோடியே 92 லட்சத்து 91 ஆயிரத்து 596 வருவாய் கிடைத்துள்ளது. முன்பதிவு இல்லாத பயணிகள் 94,552 பேர் பயணித்துள்ளனர். அவர்கள் மூலம் ரூ.47 லட்சத்து 63 ஆயிரத்து 545 வருவாய் கிடைத்துள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 450 பயணிகள் பயணம் செய்ததன் மூலம் 2 கோடியே 40 லட்சத்து 55 ஆயிரத்து 141 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதனால் தேனி ரயில்வே ஸ்டேஷன் என்.எஸ்.ஜி.5 என தரம் உயர்ந்து பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதேபோல் போடி ரயில்வே ஸ்டேஷன் இதே காலகட்டத்தில் முன்பதிவு, முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் பெற்ற 61,008 பயணிகள் மூலம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரத்து 954 வருவாய் ஈட்டி என்எஸ்ஜி – 5 என தரத்தை பெற்றுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஊரக பகுதிகள் அல்லாத நகர்புற ரயில்வே ஸ்டேஷன்களில் (non suburban stations) ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருவாய் ஈட்டுவது, பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தரம் உயர்த்தப்படும். அதுதான் என்.எஸ்.ஜி.5 என குறியீடு வழங்கப்படும்.
இதில் தேனி, போடி ரயில்வே ஸ்டேஷன்களும் அடங்கும்.’, என்றனர். ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தெற்கு ரயில்வே நிர்வாகம் தினசரி அதிவேக சென்னை ரயிலும், கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.