செல் கவுன்டர்’ கருவிஅரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குவழங்க கோரிக்கை
கம்பம்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ‘செல் கவுன்டர்’ கருவி வழங்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனாவிற்கு பின் பல வகை வைரஸ், பாக்டீரியா தாக்குதல்களால் புதுப் புது காய்ச்சல் பரவுகிறது. இதில் சிக்குன்குனியா, டெங்கு குறிப்பிடத்தக்கவை. தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேனி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவி வருகிறது.
காய்ச்சல், சளி , தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி என பலவகை பிரச்னைகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நகரங்களில் வசிப்பவர்கள் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் என்ன வகை என்பதை கண்டுபிடிக்க தேவையான உபகரணங்களை உள்ளன. கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த வசதிகள் கிடையாது. காய்ச்சலுக்கு மருந்து மாத்திரைகள் தருவார்கள். குணமாகவில்லை என்றால் அரசு மருத்துவமனை, தேனி மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கின்றனர். இதனால் அங்கேயும் நோயாளிகள் அதிகரிப்பால் அனைவரும் சிரமப்படுகின்றனர்.
எனவே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ‘செல்கவுன்டர்’ கருவி வழங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரி எடுத்து தட்டணுக்கள், வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, என்ன வகை பாக்டீரியா தாக்கி உள்ளது என்பதை கண்டு பிடிக்கலாம். சிகிச்சையளிக்க எளிதாக இருக்கும். காய்ச்சல் பரவி வரும் சூழலில் செல் கவுன்டர் கருவியை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.