சுகாதாரத்துறை அறிவுறுத்தல் ‘மாஸ்க்’ பயன்படுத்த
ஆண்டிபட்டி : குடிநீரை காய்ச்சி குடிக்கவும், சுற்றுப்புறத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்கவும், ‘மாஸ்க்’ பயன்படுத்தவும் சுகாதாரத் துறையினர், பொது மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் கடந்த சில வாரங்களாக ஆண்டிபட்டி பகுதியில் சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிப்படைந்தனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை, மருத்துவ ஆலோசனை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்நிலையில் சுகாதாரத் துறையினர் பொது மக்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சுகாதாரத் துறை அதிகாரி கூறியதாவது: தற்போது பருவநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. காய்ச்சல் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெறச் செய்ய வேண்டும். சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும். குடியிருப்புகள் பொது இடங்களில் கொசு மருந்து தெளிப்பவர்களுக்கும், உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் குடிநீரில் குளோரின் கலப்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிப்பது அவசியம். தற்போதுள்ள சூழலில் ‘மாஸ்க்’ அணிவது பாதுகாப்பானது என அறிவுறுத்தி வருகிறோம்., என்றனர்.