மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தகவல்: வார்டுகள் தோறும் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க நடவடிக்கை
தேனி: தேனி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் வார்டுகள் தோறும் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சந்தியா தெரிவித்தார்.
மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களின் பள்ளிக்கல்வி, அடிப்படை கல்வி, குழந்தை திருமணங்களை தடுப்பது என பலவேறு பணிகளை குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் செய்து வருகின்றனர்.
இந்த துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள், குழந்தைகளுக்கான திட்டங்கள் பற்றி மாவட்ட அலுவலர் சந்தியா தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக கூறியதாவது:
குழந்தைகள் நலத்துறை பணிகள் பற்றி
குழந்தைகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது. குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை என பாதிக்கப்பட்ட குழந்தைகள், அல்லது வேறு யாரேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுத்தல்.
குழந்தை திருமணங்கள் தடுத்தல், இத்திருமணத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் படிப்பை தொடர உதவி செய்தல், இல்லங்களில் வளரும் குழந்தைகள் பராமரிப்பை ஆய்வு செய்தல். அரசின் திட்டங்கள் உரிய குழந்தைகளுக்கு கிடைக்க செய்வது இத் துறையின் பணியாகும்.
மாவட்டத்தில் சிறார் திருமணம் அதிகம் நடக்கிறதே
சிறார் திருமணங்களை தடுக்க பள்ளிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதியில் அதிகம் கண்காணிக்கின்றோம்.
எங்கேயேனும் சிறார் திருமணம் நடப்பதாக தகவல் கிடைத்தால், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்கின்றோம்.
சிறார் திருமணம் நடப்பதாக தெரிந்தால் யார் வேண்டுமானாலும் 1098 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
ஓராண்டில் நிறுத்தப்பட்ட சிறார் திருமணங்களின் எண்ணிக்கை
சிறார் திருமணம் நடப்பதாக 255 புகார்கள் வந்தன. இதில் 194 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மீதம் 61 சிறார் திருமணங்கள் நடந்துள்ளது.
சிறுமிகளை திருமணம் செய்தவர்கள், திருமணத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் என தொடர்புடைய 145பேர் மீது போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறார் திருமணங்கள் தடுப்பு நடவடிக்கை பற்றி
மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் உள்ளாட்சி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழு செயல்படுகிறது.
இந்த குழு மூலம் சிறார் திருமண தகவல்கள் கிடைக்கப்பெற்ற தடுக்கப்படுகிறது. தற்போது அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளிலும் உள்ள வார்டுகளிலும் குழுக்கள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பள்ளிகள், கல்லுாரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் சிறார் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
இந்த எண்ணிற்கு 2023ஆக., முதல் 2024 ஜூலை வரை 993 அழைப்புகள் வந்துள்ளன. இதில் பள்ளி மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் என பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் புகாரை பெற்று அவர்களின் விருப்பத்தின் பேரில் நேரிலும், மறைமுகமாவும் விசாரணை மேற்கொள் கிறோம்.
சில புகார் கூறும் போது, நேரில் பிரச்னை தெரிவிக்கிறேன் என்பார்கள் அப்போது அவர்கள் கூறும் இடத்தில் சந்தித்து பிரச்னையை தெரிந்து நடவடிக்கை எடுக்கின்றோம்.
சிலர் பொதுவாக குறிப்பிட்ட இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என கூறுவார்கள் அதனையும் செயல்படுத்துகின்றோம்.
குழந்தைகள் இல்லங்களில் ஆய்வு செய்கிறீர்களா
மாவட்டத்தில் குழந்தைகள் நலத்துறையின் கீழ் 2, சமூக நலத்துறையின் கீழ் ஒன்று, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் 5 ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் செயல்படுகின்றன. மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்கிறது. துறை சார்பில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
அரசு துறைகள் கண்காணிப்பில் செயல்படும் 3 குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் 153 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஒவ்வொரு மாணவரின் பராமரிப்பு, உணவுக்காக அரசு மாதந்தோறும் ரூ.3ஆயிரம் செலவு செய்கிறது. இது தவிர தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து தொழில் நிறுவனங்கள், கடைகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பணிபுரிகின்றனரா என ஆய்வுகள் மேற்கொள்கிறோம்.
குழந்தைகள் தத்தெடுப்பது பற்றி
குழந்தைகளை தத்தெடுப்பதற்கு அரசின் அனுமதி அவசியம். நெருங்கிய உறவினர்களின் குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்றால் கூட மத்திய அரசின் cara.nic.in என்ற இணை தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யாமல் தத்தெடுப்பது சட்டப்படி குற்றமாகும். மாவட்டத்தில் ஒராண்டில்பதிவு செய்யாமல் தத்தெடுத்ததற்காக 2 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்காலிக தத்தெடுத்தல் என்பது 7 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அவர்களின் விருப்பத்தின் பேரில் தத்தெடுப்பதாகும். இக்குழந்தைகளை தத்தெடுத்தவர்கள் அழைத்து சென்ற பின்பும் 2 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.
குழந்தைகளுக்கு பிடித்திருந்தால் 18 வயது வரை அனுமதி வழங்கப்படும். குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்றால் மீண்டும் இல்லங்களுக்கு அழைத்து வந்து விடுவோம். குழந்தைகளை தத்தெடுப்பது தொடர்பான மேலும் விபரங்களுக்கு தேனி பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
தொட்டில் குழந்தை திட்டம் செயல்பாட்டில் உள்ளதா
மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பொருளாதார சூழல், உடல் நலனால் குழந்தைகளை வளர்க்க இயலாத பெற்றோர் அரசிடம் வழங்கலாம். அதற்கு அவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொது மருத்துவமனைகளில் தெரிவித்தால் போதும். துறை மூலம் குழந்தைகள் பெறப்பட்டு தத்து வளர்ப்பு மையங்களில் வளர்க்கப்படுவார்கள். ஆறு மாதங்களில் 7 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன.
பொது இடங்களில் குழந்தைகள் யாசகம் பெறுகின்றனறே
பள்ளிக் கல்வித்து றையுடன் இணைந்து யாசகம் பெறும் குழந்தைகளை சிறப்பு பள்ளியில் தங்கி படிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. ஆதரவற்ற குழந்தை களுக்கான திட்டம், பெற்றோரை இழந்தவர்கள், ஒரு பெற்றோர் மட்டும் உடைய குழந்தைகள், மாற்றத்தி றனாளிகள், சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்கு ‘மிஷன் வாத்சல்யா’ திட்டத்தில் உதவித்தொகை வழங்கப் படுகிறது. இத்திட்டத்தில் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.4ஆயிரம் வழங்கப்படுகிறதுஅரசு சார்பில் 260 பேருக்கு உதவித்தொகை வழங்கப் படுகிறது. கலெக்டர் முயற்சியில் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து ஆதரவற்ற குழந்தைகள் 255 பேருக்கு ரூ.5.75 லட்சம் மதிப்பில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது
பெற்றோர்களுக்கு வழங்கும் ஆலோசனை
பெண் குழந்தைகள் மட்டும் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதில்லை, ஆண் குழந்தைகளும் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனர். இதில் பாரபட்சம் பார்க்க கூடாது.
வீடுகளில் குழந்தைகளின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். அலைபேசி தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என்றால், எதற்காக பயன்படுத்துகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் பெறும்பாலும் நன்கு தெரிந்தவர்களால் தான் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனர். அவர்களிடம் மனம் திறந்து பேசி, குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
புகார்கள், திட்டங்களில் பயன்பெற யாரை அணுகுவது
சிறார் திருமணம், குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் செயல்பாடுகள் நடந்தால் 1098 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும். திட்டங்களில் பயன்பெற நேரடியாக அலுவலகத்தை அணுகலாம். அல்லது 89031 84098 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என்றார்.