Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

டிரைவரை வெட்டி கொன்ற இரு நண்பர்களுக்கு ஆயுள் தேனி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

தேனி:தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உ.அம்பாசமுத்தரத்தில் தங்கையை அவதுாறாக பேசிய டிரைவர் ராஜேஷ் 29, அரிவாளால் வெட்டி கொலை செய்த அதே ஊரைச் சேர்ந்த நண்பர்கள் பொம்மையசாமி 25, செல்வக்குமார் 26, ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உ.அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜேஷ் 29. மண் அள்ளும் இயந்திர டிரைவர். இவரது மனைவி தீபா. இவர் 2019 நவ., தன் இரு மகள்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பித்து வருவதாக கூறி உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகம் சென்றார்.

அன்றிரவு 8:00 மணியாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர்.

உத்தமபாளையம்- புதுார் ரோட்டில் ராஜேஷ் தாய்மாமா முருகன் சென்ற போது ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டது. அவரை தேடிச்சென்ற போது பொம்மையசாமி, செல்வக்குமார் ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினர். முருகன் புகாரின்படி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் பொம்மையசாமியின் தங்கையை ராஜேஷ் அவதுாறாக பேசியதால் கொலை செய்தது தெரிந்தது.

இவ்வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் சுகுமாறன் ஆஜரானார். இருவருக்கும் ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *