Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

நேரில் கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை: குமுளி பஸ் ஸ்டாண்டில் பக்தர்கள் வாகனங்களால் நெரிசல்

கூடலுார்,: குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால, மகர விளக்கு உற்ஸவ பூஜைகள் துவங்கியுள்ளன. இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குமுளி வழியாக வாகனங்களில் சபரிமலைக்கு செல்கின்றனர்.

எல்லைப் பகுதியான குமுளியில் 2022 நவம்பரில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் துவங்கியது. ஆனால் ஒராண்டிற்கு மேலாகியும் பணிகள் மெத்தனமாக நடந்து வருகின்றன.

சபரிமலை உற்ஸவம் துவங்குவதற்கு முன் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் பகுதியில் பஸ்களை திருப்புவதற்காக ஏற்பாடுகள் செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யப்படும் என கலெக்டர் அறிவித்திருந்தார். ஆனால் இதைக் கண்டு கொள்ளாமல் பணிகள் தொடர்ந்து மெத்தனமாக நடந்து வருகிறது. மேலும் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் பகுதியில் யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவிப்பு அமைக்கப்பட்டு உள்ளது.

வழக்கத்தை விட தற்போது ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக வர துவங்கி உள்ளன. குமுளி வரை சென்று திரும்பும் தமிழக அரசு பஸ்கள் திருப்புவதற்கு இட வசதியின்றி கேரள அரசு பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று திரும்பி வருகின்றன. ரோட்டில் அதிக பஸ் நிறுத்தப்படுவதால் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் பல மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவிப்பது தொடர்கிறது. இதனால் கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *