குற்றச் செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு: ‘நம்பர் பிளேட்’ இன்றி இயங்கும் டூவீலர்கள் கண்காணிக்கப்படுமா,
தேனி: மாவட்டத்தில் நம்பர் பிளேட் இன்றி டூவீலர்களை இயக்குவது அதிகரித்துள்ளது. இவ்வகை டூவீலர்களை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இந்த டூவீலர்கள் எழுப்பும் ஹாரன் சத்தத்தால் பிற வாகன ஓட்டிகளும் பாதிப்படைகின்றனர். இதனால் இதுகுறித்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது மக்கள் கோரியுள்ளனர்.
இம்மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் டூவீலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதிலும் தேனி, பெரியகுளம், சின்னமனுார் உள்ளிட்ட நகர் பகுதி, அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நம்பர் பிளேட் இன்றி இயங்கும் டூவீலர்களின் எண்ணிக்கையும் அதிகம். இவ்வகை டூவீலர்களை 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகம் இயக்குகின்றனர். சிலர் ‘ரேஸ்’ விடுவதற்கும், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன் பொருத்தியும் இயக்குகின்றனர். இந்த டூவீலர்கள் எழுப்பும் அதிக சப்தத்தினால்த்தத்தினால் ரோட்டில் செல்லும் மற்ற டூவீலர் ஓட்டிகள் தடுமாறுவதும் தொடர்கிறது. இவ்வகை டூவீலர்களை பள்ளி, கல்லுாரி மாணவர்களும் அதிகம் ஓட்டுகின்றனர்.
இவ்வகை டூவீலர்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. போக்குவரத்து போலீசார் நம்பர் பிளேட் இல்லாமல் டூவீலர்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் மாணவர்கள் டூவீலர் ஓட்டும் போது டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். போக்குவரத்து விதிகளை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே போல் மாணவர்கள் டூவீலர்கள் ஓட்ட கற்க வேண்டும் என்றால் பொது மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் பயிற்சி எடுக்க பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்., என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிககை எடுக்க வேண்டும்.