Sunday, June 8, 2025
மாவட்ட செய்திகள்

ரூ.2 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் : 18 இடங்களில் ஆய்வு மூல வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க

தேனி: தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மூல வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கலெக்டர் ஷஜீவனா தலைமையில் அதிகாரிகள் குழு 18 இடங்களில் ஆய்வு செய்தனர். இப் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மலை பகுதிகளில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு முல்லை பெரியாற்றுடன் இணைந்து வைகை அணைக்கு செல்கிறது. வைகை அணை 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது. வைகை ஆற்றில் பல இடங்களில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக ‘தினமலர்’ நாளிதழில் நவ.15ல் ‘5 மாவட்டங்களில் 177 இடங்கள். கழிவு நீரால் பாழாகும் வைகை’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் மூலவைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடங்களை நேற்று கலெக்டர் ஷஜீவனா தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், மஞ்சளாறு, பெரியாறு வைகை உதவி செயற்பொறியாளர் சாலமன் கிறிஸ்து தாஸ், ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன் ஆகியோர் வைகை கரையோர கிராமங்களில் ஆய்வு செய்தனர்.அதிகாரிகள் கூறுகையில், ‘ வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.2 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மூலவைகையில் வாலிப்பாறை, தும்மக்குண்டு, வருஷநாடு, மயிலாடும் பாறை, கடமலைக்குண்டு,கோவிந்தநகரம், கண்டமனுார், அம்மச்சியாபுரம் வரை 18 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது,’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *