விபத்து அபாயம்; சென்டர் மீடியன்களில் ஒட்டும் போஸ்டர்களால் பொது இடங்களை அசுத்தம் செய்யும் கலாசார
பெரியகுளம்: மாவட்டத்தில் நெடுஞ்சாலை சென்டர் மீடியன் சுவர்களில் போஸ்டர்களை ஒட்டுவதால் வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் முக்கிய நகரங்களை இணைக்கும் அனைத்து ரோடுகளில் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி முதல் தேனி வறட்டாறு வரையும், தேனி – போடி ரோடு, ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் வரை ஆங்காங்கே விபத்துகளை தடுக்கும் நோக்கில் ரோட்டின் மையப்பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியால் இப் பகுதிகளில் விபத்துக்கள் குறைந்துள்ளது. வாகன ஓட்டிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
மோசமான கலாச்சாரம்
சில மாதங்களாக சென்ட்ரல் மீடியன்களில் அரசியல் கட்சிகள் போஸ்டர் ஒட்டும் கீழ் தரமான கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. பெரியகுளத்தில் சென்டர் மீடியனை நாறவைக்கும் போஸ்டர் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் அரசியல் கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டினர். நிகழ்ச்சி பிளக்ஸ் பேனரை இரும்பு பிரேமில் ஒட்டி நிறுத்தினால் கூடுதல் செலவு ஆகும் என கருதி ஒருசில கட்சியினர் சென்டர் மீடியனில் பிளக்ஸ் பேனரை பசையால் ஒட்டி வைக்கும் அவலம் நிகழ்கிறது. இவர்களை தொடர்ந்து அவற்றில் காலமானார், போராட்டம், நினைவஞ்சலி என அனைத்து வகை போஸ்டர்களை ஒட்டி செல்கின்றனர். நெடுஞ்சாலை துறை சென்டர் மீடியன் சுவரில் வெள்ளை,கருப்பு வண்ணம் பூசியதை போஸ்டர்கள் மறைத்ததால் சில இடங்களில் தடுப்புகளே தெரியாத அளவிற்கு மோசமாக உள்ளது. நாள்பட்ட போஸ்டர்கள் காற்றில் கிழிந்து வாகன ஓட்டிகள் முகத்தில் விழுகிறது.
கவன சிதறலை ஏற்படுத்தும் போஸ்டர்கள்
வாகன ஓட்டிகள் பலர் போஸ்டர்களை பார்த்தபடி வாகன ஓட்டுவதால் கவன சிதறல் ஏற்பட்டு, சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் ஐயப்பபக்தர்கள் மீது வாகனங்கள் உரசி செல்கின்றனர்.
திருச்சி ஐயப்ப பக்தர் மணிகண்டசிவம் கூறுகையில்,’பாதயாத்திரையாக வரும்போது தேவதானப்பட்டியிலிருந்து- பெரியகுளம் வருவதற்குள் இரு இடங்களில் போஸ்டர்களை பார்த்துக் கொண்டு வாகன ஓட்டிகள் பக்தர்கள் மீது வாகனம் மோதும் வகையில் வந்தனர் என்றார். குறிப்பாக பெரியகுளம் பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதி, பாரதி நகர், பகுதிகளில் போஸ்டர் அதிகம் ஒட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போஸ்டர்களை அகற்றி, சுண்ணாம்பு பூசிடவும், சாலைப் பணியாளர்கள் மூலம் சென்டர் மீடியன்களை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.