கூடலுார் நகராட்சி தெருக்கள் ஆக்கிரமிப்பு அகற்றாததால் சுருங்குகிறது
கூடலுார்: பல ஆண்டுகளாக கூடலுார் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் அனைத்து தெருக்களும் சுருங்கின. இதனால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் மையப் பகுதியில் கூடலழகிய பெருமாள் கோயிலுக்கு தேர் செல்லும் நான்கு ரத வீதிகள் உள்ளன. அண்ணா நகர், காந்திகிராமம், கரிமேட்டுப் பட்டி, ராஜீவ் காந்தி நகர், சுக்காங்கல்பட்டி, எம்.ஜி.ஆர். காலனி, பழைய பஸ் ஸ்டாண்ட், கன்னிகாளிபுரம், கருணாநிதி காலனி என மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலையில் இருந்து இப்பகுதிகளுக்குச் செல்ல லாரி, பஸ் செல்லும் வகையில் ரோடு வசதி இருந்தது. மேலும் குறுக்குத் தெருவிலும் மினிலாரி, வேன் என சென்று வந்தன.
லாரி, பஸ் சென்று வந்த தெருக்கள் தற்போது சிறிய வேன் கூட செல்ல முடியாத வகையில் உள்ளது. மேலும் நகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீடு, கடைகள், படி என கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் 12 அடி அகலம் உள்ள பல தெருக்கள் தற்போது 5 அடியாக சுருங்கியுள்ளது. தெருக்களில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தும்போது மற்ற வாகனங்களும் கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் கூட தெருக்களில் செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
தயக்கம்
2004ல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி, 2010க்கு பின் இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பின் இதுவரை தெருக்களில் அளவீடு செய்யவில்லை. கடந்த சில மாதங்களாக நகராட்சியில் நிரந்தர கமிஷனர், நகராட்சி பொறியாளர் இல்லாததால் இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தெருக்களில் படிகள் நீண்டு நடந்து செல்ல முடியாத வகையில் உள்ளது. அலுவலர் இன்றி தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. உடனடியாக கள ஆய்வு செய்து பாரபட்சமின்றி அனைத்து தெருக்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.