மூணாறு அருகே விடுதி 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் பலி: போலீசார் விசாரணை
மூணாறு, ஜன. 10: மூணாறு அருகே விடுதியின் 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மூணாறுக்கு, மத்தியப் பிரதேசம் மாநிலம், மஹல்லாமந்தி பகுதியை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் மூணாறு அருகே உள்ள சித்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். இதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விடுதியின் 6வது மாடியில் தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை சாகர் தலால் என்பவரின் மகன் பிரபாக்யா தலால் (10), அறையில் இருந்த நாற்காலியின் மேல் ஏறி ஜன்னலை திறந்து பார்த்தபோது, தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். சம்பவம் குறித்து வெள்ளத்தூவல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.