வெள்ளத்தில் சிக்கிய லாரி
போடி: கேரளா, குரங்கணி, கொட்டகுடி பகுதியில் பெய்து வரும் கனமழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஆற்றில் சிக்கி கொண்டது.
கேரளா, போடி, குரங்கணி, கொட்டகுடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்ய துவங்கிய கனமழையானது நேற்று மதியத்திற்கு மேலும் நீடித்தது. குரங்கணி பகுதியில் பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ள நீர் அதிகரித்து வருகிறது. இதனால் ஆற்று பகுதியில் குளிக்கவோ, வாகனங்களில் கடக்கவோ, கால் நடைகளை கொண்டு செல்லவோ கூடாது என போலீசார் எச்சரித்து இருந்தனர்.
போடி அருகே துரைராஜபுரம் காலனி வடக்கே உள்ள குவாரியில் எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி டிரைவர் அருகே உள்ள கொட்டகுடி ஆற்றை கடக்க முயன்று உள்ளார்.
அதிக பாரம் ஏற்றி வந்ததால் ஆற்றைக் கடக்க முடியாமல் வெள்ள நீரில் டிப்பர் லாரி சிக்கிக் கொண்டது. ஆற்றின் ஓரமாக நின்றிருந்தவர்கள் லாரி டிரைவரை காப்பாற்றினர். டிப்பர் லாரியில் இருந்த எம்.சாண்ட்யை மண் அள்ளும் இயந்திரம் மூலம் வெளியே எடுத்தனர். பாரம் குறைந்த பின் அங்கிருந்த நபர்கள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிப்பர் லாரியை ஆற்றில் இருந்து வெளியே எடுத்தனர்.