Wednesday, June 4, 2025
மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம் ரூ.72.25 லட்சம் மோசடி: கரூர் வியாபாரி கைது

தேனி:தேனி மாவட்டம் கம்பம் அருகே மேலக்கூடலுார் இன்ஜினியரிங் பட்டதாரி பிரபு 27. இவரது நண்பர் மின்வாரிய ஒயர்மேன் சந்திரசேகர். இவர் 2021 டிசம்பரில் பிரபுவை சந்தித்தார். அப்போது, ‘கரூர் மாவட்டம், வெண்ணமலைகுமார், கோவை நடுப்பாளையம் உஷாராணி, சின்ன காஞ்சிபுரம் அண்ணாநகர் கவுரிசங்கர் ஆகிய மூவரை தனக்குத் தெரியும், அவர்கள் பலருக்கு அரசுப் பணி வாங்கித் தந்துள்ளனர்,’ என ஆசை வார்த்தை கூறினார்.

சந்திரசேகர் அந்த மூவரையும், பிரபு, தேனி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன், பிரதீப்குமார், தினேஷ்குமார், ஆனந்த் ஆகிய ஐந்து பேரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அவர்கள் பிரபுவிற்கு நீர்வளத்துறையில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித்தர ரூ.30 லட்சம் கேட்டனர். இதனை நம்பிய பிரபு, குமாரின் மனைவி பூமகள், உஷாராணி, கவுரிசங்கர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளிலும், ரொக்கமாகவும் ரூ.19.75 லட்சத்தை பல தவணைகளாக வழங்கினார். பணி நியமன ஆணை பெற்ற பிரபுவிற்கு அது போலியானது என தெரிந்தது. இதேபோல் மற்ற 4 பேரிடமும் ரூ.52.50 லட்சம் என மொத்தம் ரூ.72.25 லட்சம் பெற்று, வேலை வாங்கித்தராமல் மோசடி செய்தனர்.

இதையடுத்து பிரபு தேனி முன்னாள் எஸ்.பி., பிரவின்உமேஷ் டோங்க்ரேவிடம் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் 2023 செப்.,9ல் சந்திரசேகர், குமார், அவரது மனைவி பூமகள், உஷாராணி, கவுரிசங்கர் ஆகிய ஐவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பூமகளை டிச.12ல் கைது செய்தனர்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று குமாரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *