Sunday, June 8, 2025
மாவட்ட செய்திகள்

ரோட்டோர கடைகளை அகற்றுவதில் சிக்கல் உயர் நீதி மன்றத்தில் மனு

மூணாறு : ரோட்டோர கடைக்காரர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியதால் கடைகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

மூணாறில் ரோட்டோர கடைகளை அகற்றும் பணி அக்.25ல் துவங்கிய நிலையில் அரசியல் கட்சியினர் உள்பட பல தரப்பினரின் எதிர்ப்பால் பணி கைவிடப்பட்டது. ரோட்டோர கடைகளை அகற்றுவதற்கு தடை விதிக்குமாறு மூணாறு மற்றும் பள்ளிவாசல் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த ரோட்டோர கடைகாரர்கள் 25 பேர், இரு குழுக்களாக தாக்கல் செய்த இரண்டு மனுக்களை தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளில் உள்ள கடைகளை ஆறு வாரத்திற்குள் அகற்றி விட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு இடுக்கி கலெக்டர், தேவிகுளம் சப் கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டது.

துவக்கம்: அதன்படி பள்ளிவாசல் ஊராட்சியில் 2ம் மைல் பகுதியில் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை 5 நாட்களுக்குள் காலி செய்யுமாறு சிறப்பு தாசில்தார் ஹரிகுமார் தலைமையில் கடந்த வாரம் 35 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சிக்கல்: அவர்கள் கடைகளை காலி செய்யாததால், அவற்றை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஆயத்தமாகி கொண்டிருந்தனர்.

இதனிடையே தங்களிடம் விளக்கம் கேட்காமல் உத்தரவிட்டதாக கூறி, ரோட்டோர கடைகாரர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தை அணுகியதால் கடைகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *