திறப்பு விழா காணாத செவிலியர் குடியிருப்புகள்
போடி, : போடி அருகே சிலமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 22.75 லட்சம் மதிப்பில் செவிலியர் குடியிருப்புகள் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது.
சிலமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிலமலை, சூலப்புரம் உள்ளிட்ட கிராம பகுதியைச் சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு இரவு நேரங்களில் தங்கி பணிபுரியும் செவிலியர்களுக்கு தனியாக குடியிருப்புகள் இன்றி சிரமம் அடைந்தனர். இதனை தவிர்க்க ரூ.22.75 லட்சம் மதிப்பில் புதிதாக செவிலியர் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. திறக்கப்படாததால் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக பூட்டியே உள்ளது.இதனால் செவிலியர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் தங்கி பணி புரிய சிரமம் அடைந்து வருகின்றனர். கட்டி முடிக்கப்பட்ட செவிலியர் குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.