சுந்தர வடிவேல் சுவாமி வலியுறுத்தல் பக்தர்களின் சிரமத்தை குறைக்க குமுளி ஒரு வழிப்பாதையை ரத்து செய்து வேண்டும்
கூடலுார்: குமுளி மலைப்பாதையில் அறிவிக்கப்பட்ட ஒரு வழிப்பாதையை ரத்து செய்து பக்தர்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என லோயர்கேம்ப் மகாசக்தி பீடம் மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறும் போது:
பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களை ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டதாக கூறி கம்பம்மெட்டு, ஏலப்பாறை, குட்டிக்கானம் என பல கிலோமீட்டர் சுற்ற வைத்து சிரமத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். ஏற்கனவே குமுளி மலைப் பாதை அகலப்படுத்தப்பட்டு இரண்டு வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் உள்ளது. லோடு ஏற்றிய லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டும் கம்பம் மெட்டு வழியாக அனுமதித்து, 6 கி.மீ., துார குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க முடியும். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மகரஜோதி நாட்கள் மட்டும் ஒரு வழிப்பாதையாக அமல்படுத்தப்படும். தற்போதுமுன்கூட்டியே அமல் படுத்துவதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒருவழிப்பாதை அமல்படுத்துவதற்காக பல இடங்களில் போலீசார்களையும் சிரமப்படுத்தி வருகின்றனர். தமிழக பகுதியில் இருந்து சென்று திரும்பும் அரசு பஸ்கள் குமுளியில் திருப்புவதற்கு வசதிகள் ஏற்படுத்தினால் மட்டும் போதும். குமுளி மலை பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். பக்தர்களுக்கு சிரமம் குறையும். அதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு வழிப்பாதையை ரத்து செய்ய வேண்டும், என்றார்.