வனப்பகுதி அருகே வசிப்போரிடம் ஆலோசனை நடத்த உத்தரவு
தேனி: மாவட்டம் வாரியாக வனப்பகுதி அருகே உள்ள விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த வனத்துறையினருக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைவதும், பல இடங்களில் வன விலங்குகள் மனித மோதல் நடக்கிறது. வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் வருவதை தடுக்க சில விவசாயிகள் மின் வேலி அமைக்கின்றனர்.
இதனால் வனவிலங்குகளுடன், மனித உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்க வனத்துறை, வருவாய்த்துறை, மின் வாரியம் சார்பில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது.
இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், ‘வனப்பகுதியை ஒட்டி உள்ள விளை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுடன் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆலோசனை நடத்த அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வனவிலங்குகளை தடுத்தல், சோலார் மின்வேலி அமைத்தல், அதற்கு வனத்துறை அனுமதி பெறுதல், வனத்தீ ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது அரசு துறைகளுக்கு தகவல் தெரிவிப்பதுபற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. என்றனர்.