Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கூலி உயர்வு கோரி விசைத்தறி நெசவாளர்கள் ஸ்டிரைக் துவக்கம்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் விசைத்தறி நெசவாளர்கள் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர். பல லட்சம் மதிப்பிலான காட்டன் ரக சேலைகள் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

டி.சுப்புலாபுரத்தில் 2000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி தொழிலில் 4000 மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி விசைத்தறிகளில் உற்பத்தியாகும் 60, 80ம் நம்பர் காட்டன் ரக சேலைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விசைத்தறி நெசவாளர்களுக்கான இரு ஆண்டுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் டிசம்பர் 31ல் முடிந்தது. புதிய கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும், புதிய ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகள் இல்லை.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் வேலையை துவக்கிய விசைத்தறி நெசவாளர்கள், மதியம் 12:00 மணிக்கு வேலை நிறுத்தத்தை துவக்கி தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். தொ.மு.ச., அ.தொ.ச., சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ்., ஆகிய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விசைத்தறி உரிமையாளர்களை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *