தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் ரோட்டோர கடைகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் ராஜவாய்க்கால் பாலம் விரிவாக்க பணிக்காக கம்பம் ரோட்டில் ஆக்கிரமித்து இருந்த 15 ரோட்டோர கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட் ராஜவாய்க்கால் பகுதியில் 21 மீ., நீளம், 3 மீ., அகலத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் சீராக செல்லும் வகையில் சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மண் அள்ளும் இயந்திரம் மூலம் கம்பம் ரோட்டில் ரோட்டின் நடுவே பாலத்தை இடித்து சீரமைக்கும் பணிகள் துவங்கின. 15 தெருவோர கடைகள் போக்கவரத்திற்கு இடையூறாக இருந்தன. நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் கவிப்பிரியா தலைமையிலான ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. இதில் ஒரு சில கடைகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொண்டனர்.