தங்க பிஸ்கட்டில் நகை ரூ.74.75 லட்சம் மோசடி
தேனி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, சக்கம்பட்டி எஸ்.வி.டி., நகரைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி சுந்தர், 40; ஜவுளிக்கடை உரிமையாளர். கடையில் அதே பகுதி முத்துப்பாண்டி மனைவி ரேவதி, 37, நான்கு ஆண்டுகளாக சேலைகள் வாங்கி, விற்று வந்தார்.
கடந்த 2024 ஜனவரியில் ரேவதி, அவரது மகள் பூமிகா ஆகியோர் சுந்தரிடம் எழுவனம்பட்டியை சேர்ந்த வீரன், 43, என்பவரை அறிமுகம் செய்தனர்.
அவர், ‘மதுரையை சேர்ந்த நகை வியாபாரி வெற்றிவேல் என்பவரிடம் தங்க பிஸ்கட் உள்ளது; அதை வாங்கி நாகபட்டினத்தில் நகை செய்யும் ஆசாரி பாலசுப்பிரமணியத்திடம் வழங்கி புதிய நகைகளை செய்யலாம்’ என, கூறினார்.
பின், மொபைல் போனில் தங்க பிஸ்கட் வாயிலாக செய்த நகைகளின் புகைப்படங்களை காண்பித்தார்.
அதை நம்பிய சுந்தர், 125 சவரன் தங்க நகைகள் செய்து தரக்கோரி, அவர்கள் வழங்கிய வங்கி கணக்கிலும், நேரிலும், 74.75 லட்சம் ரூபாய் வழங்கினார். பணம் பெற்றவர்கள் நகை செய்து தரவில்லை.
சுந்தர் புகாரின்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ரேவதி, வீரன், ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான பூமிகா, பாலசுப்பிரமணி, வெற்றிவேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.