Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் வரையாடுகளுக்கு அச்சுறுத்தல்

மூணாறு: மூணாறு அருகே ராஜமலைக்கு செல்லும் வழியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வரையாடுகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மூணாறு பகுதியில் புலி, சிறுத்தை ஆகியவை ஏராளம் உள்ளபோதும், சமீபகாலமாக கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்தது.

கன்னிமலை எஸ்டேட், லோயர் டிவிஷன் பகுதியில் டிச.16 நள்ளிரவில் பஜனை முடிந்து வீடு நோக்கி சென்ற ஐய்யப்ப பக்தர்களின் ஜீப்பின் குறுக்கே கருஞ்சிறுத்தை பாய்ந்தது.

இந்நிலையில் இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு செல்லும் வழியில் தேயிலை தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பகலில் கருஞ்சிறுத்தை நடமாடியதை சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் பார்த்தனர். அப்பகுதியில் மானை வேட்டையாடிய கருஞ்சிறுத்தை, அதனை தின்பதற்கு வந்து சென்றதாக தெரியவந்தது.

அச்சுறுத்தல்: ராஜமலையில் வரையாடுகள் நூற்றுக் கணக்கில் உள்ளன.

அவை இயற்கை சீற்றம் மற்றும் வனவிலங்குகள் தாக்குதல் ஆகியவற்றின் மூலம் உயிரிழப்பதால், அழிந்து வரும் உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் ராஜமலை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வரையாடுகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *