நில மோசடியில் ஒருவர் கைது
தேனி : தேனி அருகே நில மோசடியில் ஈடுபட்டதாக கெப்புரெங்கன்பட்டியைசேர்ந்த மணிராஜனை 56, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தேனி வீரபாண்டி மாரியம்மன்கோவில்பட்டி கணேசன் 78. இவருக்கும், இவரது தம்பி மனைவி ஜோதிக்கும் 44 சென்ட் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந் நிலத்தின் அருகே வசிக்கும் சிலர், அதனைகுறைந்த விலைக்கு தருமாறு கோரி தகராறில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்நிலத்தை கெப்புரெங்கன்பட்டியை சேர்ந்த மணிராஜனுக்கு ‘பவர்’ எழுதி கொடுத்தனர்.
இவர் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேஷ்வரனுக்கு கிரைய ஒப்பந்தம் செய்து, நிலத்தை விற்றார்.இதேபோல் ஜோதியின் நிலத்தையும் கிரைய ஒப்பந்தம் செய்தார். இருநிலங்களுக்கும் ஒரே ‘செக்’கொடுத்து, கணேசனின் உயிர்வாழ் சான்றிதழ் இணைக்காமல் மணிராஜ், வெங்கடேஸ்வரன் மோசடி செய்தனர்.
இதற்கு போடியை சேர்ந்த அய்யப்பன் மனைவி பிரியா, பழனிசெட்டிபட்டி மகேஷ் உடந்தையாக இருந்தனர்.
கணேசன் புகாரில் குற்றப்பிரிவு போலீசார் மணிராஜ், வெங்கடேஸ்வரன், பிரியா, மகேஷ் ஆகிய நால்வர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி எஸ்.ஐ.,,பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக இருந்த மணிராஜை கைது செய்தனர்.