லோக்சபா தேர்தல் பயணப்படி வழங்கப்படாததால் குமுறல்
தேனி:கடந்த லோக்சபா தேர்தலில் 78 நாட்கள் பணி செய்த சிறப்பு பிரிவு போலீசாருக்கு மாநில முழுவதும் பயணப்படி வழங்காமல் இழுத்தடிப்பதாக குமுறுகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த லோக்சபா தேர்தலை 2024 மார்ச் 16 முதல் ஜூன் 6 வரை நடத்தி முடித்தது. மொத்தம் 83 நாட்கள் தேர்தல் பணி நடந்தது. இதில் ஓட்டுப்பதிவு நாள், ஓட்டு எண்ணிக்கை பணிக்கான நாட்களை கணக்கிட்டு 5 நாட்கள் மட்டும் உடனடியாக பயணப்படியுடன் கூடிய உணவுப்படி நபர் ஒருவருக்கு ரூ.400 என அனைவருக்கும் வழங்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிஅமல்படுத்திய நாள் முதல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை பணியாற்றிய மீதம் உள்ள 78 நாட்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் 490 டி என்ற அரசாணையில் தெரிவித்துள்ளது.
அதன்படி சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு மட்டும் பயணப்படியை உடனடியாக விடுவித்த அரசு சிறப்பு பிரிவுகளில் உள்ள சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.சி.ஐ.டி., லஞ்ச ஒழிப்புத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு, க்யூ பிராஞ்ச் போலீசார், போதைப்பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு, எஸ்.ஐ.யு.,(சிறப்பு புலனாய்வுப் பிரிவு), மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் உட்பட அனைவருக்கும் பயணப்படி வழங்க அரசாணை வெளியிடப்பட்ட பிறகும் இதுவரை வழங்கவில்லை அந்த பிரிவு போலீசார் குமுறுகின்றனர்.