தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்பு
தேனி: தை அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஆற்றங்கரைகள், அருவி பகுதிகளில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
வீரபாண்டி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பித்ருக்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். கால்நடைகளுக்கு அகத்திகீரை, பழங்கள் வழங்கி கண்ணீஸ்வர முடையாரை வழிபட்டனர். சிறப்பு அபிேஷகம் நடந்தது. பலர் அன்னதானமும் வழங்கினர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், கண்ணீஸ்வர முடையார் கோயில்களில் அதிக அளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கம்பம்: சுருளி அருவியில் அதிகாலை முதல் பொதுமக்கள் திரண்டனர். இங்குள்ள அருவியில் குளித்து, புரோகிதர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின் பூதநாராயணர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். உத்தமபாளையம், சின்னமனூர் முல்லைப் பெரியாற்றங் கரைகளிலும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில்களிலும் பக்தர்கள் மோட்ச தீபமேற்றி வழிபட்டனர்.
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயிலில் வரும் வற்றாத சுனையில் நீராடி வேலப்பரை வழிபட்டனர். மாவூற்று வேலப்பருக்கு அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் பலர் முடிகாணிக்கை செலுத்தினர். காவல் தெய்வம் கருப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம் என 21 வகையான அபிஷேகங்கள் செய்தனர். துளசி மாலை, வடை மாலை சுவாமிக்கு அணிவித்தனர். ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பெரியகுளம் : பாலசுப்பிரமணியர் கோயில் வராக நதி படித்துறையில் நேற்று அதிகாலை 4:00 மணி முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனை வணங்கி சென்றனர்.
போடி: வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்து உள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.