சாலையோர ஆக்கிரமிப்புக்களை பிப்.20க்குள் அகற்றிட நோட்டீஸ்
கம்பம் : கம்பத்தில் சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்பவர்கள் ஆக்கிரமிப்புக்களை பிப்.20க்குள் அகற்றிக் கொள்ள நகராட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.
கம்பத்தில் சாலையோரங்களில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், பலசரக்கு விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர். சமீப காலத்தில் தெருவோர கடைகள் புற்றீசல்கள் போல அதிகரித்தது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நகராட்சி ஆக்கிரமிப்புகளை பல முறை அகற்றினாலும் மீண்டும் மீண்டும் கடைகள் அமைக்கின்றனர்.
தற்போது தீவிர நடவடிக்கை எடுக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி, உழவர் சந்தையை சுற்றியுள்ள பகுதிகள், ஓடைக்கரை வீதி ஆகியவற்றில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகளுக்கு நகராட்சி நோட்டீஸ் வழங்கி பிப்., 20 ம் தேதிக்குள் அகற்றி கொள்ள வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் நகராட்சி சார்பில் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.