தோட்ட வரப்பு ஓரங்களில் நொச்சி வளர்க்கும் திட்டம்
கம்பம்: தோட்டங்களில் வரப்பு ஓரங்களில் நொச்சி வளர்ப்பதால், இயற்கை பூச்சி விரட்டியாகவும், வேலியாக பயன் தருவதால், விவசாயிகள் நொச்சி வளர்ப்பில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
நொச்சி மருத்துவ குணம், இயற்கை பூச்சி விரட்டி, பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்கும் திறன் கொண்ட பயிராகும். வேலிப்பயிராகவும் பயன்படும். நொச்சி வளர்ப்பதால் மண் வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்படும், சாகுபடி செய்துள்ள பயிர் நன்றாக வளரும்.
எனவே தோட்டங்களில் வரப்பு ஓரங்களில் நொச்சியை வளர்க்க இலவச நொச்சி கன்றுகள் வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பரில் வேளாண் துறை அறிவித்தது.
ஒரு விவசாயிக்கு 60 கன்றுகள் வரை இலவசமாக வழங்கப்பட்டதால், தோட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்று நடவு செய்தனர்.
கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் வட்டாரங்களில் ஆயிரக்கணக்கான நொச்சி நாற்றுக்களை, பெரியகுளம் தோட்டக் கலை பண்ணையிலிருந்து வாங்கி அதிகாரிகள் விநியோகம் செய்தனர். விடுபட்ட விவசாயிகள் நொச்சி நாற்றுகளை வாங்கி நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.