பச்சிளங் குழந்தைகள் சிகிச்சை பிரிவு சிறப்பு கவனம் செலுத்த வலியுறுத்தல்
கம்பம்: மாவட்டத்தில் மூன்று அரசு மருத்துவமனைகளில் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவுகளில் போதிய ஆர்வம் இல்லாத நிலை உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளுக்கு அதன் உள்கட்டமைப்பு, சிகிச்சை முறைகளை வைத்து காயகல்ப், லட்சயா, தேசிய தரச்சான்று விருதுகள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறந்தது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் ‘முஸ்கான்’ திட்டத்தை தேசிய சுகாதார இயக்கம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் படி, குழந்தைகள் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு, பச்சிளங் குழந்தைகள் சிசிச்சை பிரிவு, ஊட்டச்சத்து மற்றும் ரிகாபிலேசன் பிரிவு ஆகிய நான்கு பிரிவுகள் அமைக்கப்படுகின்றன.
இந்த பிரிவுகளை மாநில அளவிலும், தேசிய அளவிலும் குழுவினர் ஆய்வு செய்து சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும். சிறப்பான சிகிச்சை மற்றும் உள்கட்டமைப்பில் தேர்வு செய்யப்படும் மருந்துவமனைகளுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கும். மாவட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த தொகையில் 25 சதவீதத்தை டாக்டர்கள், நர்சுகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்கலாம்.
குழந்தைகள் சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்தவே இந்த திட்டம் துவங்கப்பட்டது. ஆனால் இந்த மூன்று மருத்துவமனைகளிலும் இந்த முஸ்கான் திட்டத்தில் போதிய கவனம் செலுத்தாத நிலையே உள்ளதாக தெரிகிறது.