கம்பமெட்டு மலைப்பாதையில் உலா வரும் மிளா மான்கள் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டுகோள்
கம்பம்: கம்பமெட்டு ரோட்டில் மிளா மான்கள் இரவில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக செலுத்த வனத்துறை வலியுறுத்தியுள்ளது.
மிளா மான்கள் இரை தேடி இரவில் ஆசாரிபள்ளம், மந்திப் பாறை பகுதிகளிலிருந்து ரோட்டை கடந்து வனப்பகுதிக்குள் செல்கிறது.
ரோட்டோரங்களில் உலா வருகிறது. வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கம்ப மெட்டிலிருந்து கம்பம் நோக்கி செல்பவர்கள் வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறையினர் வலியுறுத்துகின்றனர். கடந்த டிசம்பரில் 3 வயது மதிக்கத் தக்க பெண் மிளா மான் கம்பமெட்டு ரோட்டில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.
செந்நாய் கூட்டங்களும் இரவில் ரோடு பகுதியில் உலா வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து வர வேண்டும். இது தொடர்பாக சோதனை சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இரவில் வனத்துறையினர் கம்பமெட்டு ரோட்டில் ரோந்து சுற்றி வருகின்றனர்.