Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

கரடி தாக்கி இருவர் பலி

கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் வருஷநாடு அருகே வனப்பகுதியை ஒட்டி இருந்த விவசாய நிலத்தில் கரடி தாக்கியதில் விவசாய கூலித் தொழிலாளிகள் தங்கம்மாள்புரம் மணிகண்டன் 45, தர்மராஜபுரம் கருப்பையா 55, பலியாகினர்.

வருஷநாடு கோவில்பாறை கண்மாய் அருகே உள்ள அவர்களது நிலத்தில் வசித்து, விவசாயம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சாரல் மழை பெய்தது. அப்போது மணிகண்டன் தோட்டத்தில் இருவரும் எலுமிச்சம் பழங்கள் பறித்து சாக்குகளில் கட்டி டூவீலரில் ஏற்றுவதற்காக நடந்து வந்தனர். திடீரென அந்த வழியாக வந்த கரடி, கருப்பையா, மணிகண்டன் இருவரையும் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்

தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற கண்டமனுார் வனத்துறையினர், கடமலைக்குண்டு போலீசார் இறந்து கிடந்த இருவர் உடல்களையும், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டமனுார் வனத்துறையினர், கடமலைக்குண்டு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். வனப்பகுதியில் கரடி தாக்கி அடுத்தடுத்து இறப்பு தொடர்வதால் மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். விவசாயிகளின் அச்சத்தை போக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.

வனத்துறை மறுப்பு

வனத்துறையினர் கூறியதாவது: இறந்தவர்கள் உடலில் இருந்த காயங்கள் கரடி தாக்கியதில் ஏற்பட்டதாக தெரியவில்லை. அப்பகுதியில் கரடிகள் வந்து சென்றதற்கான எவ்வித தடயங்களும் இல்லை என்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே முழுமையான தகவல்கள் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *