தேவதானப்பட்டி முருகமலை அடிவாரத்தில் புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி, மார்ச் 6: தேவதானப்பட்டி அருகே உள்ள முருகமலை அடிவார பகுதிகளில் புதிய நீர்தேக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி முருகமலை மஞ்சளாறு அணை கிராமத்தில் ஆரம்பித்து தேவதானப்பட்டி வருவாய் கிராமம், டி.வாடிப்பட்டி வருவாய் கிராமம், சில்வார்பட்டி வருவாய் கிராமம், எண்டப்புளி வருவாய் கிராமம் மற்றும் கீழவடகரை வருவாய் கிராமங்களை உள்ளடங்கிய அதிக பரப்பளவை கொண்டது. திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் முருகமலை அடிவாரப்பகுதி தேவதானப்பட்டியில் ஆரம்பித்து, பெரியகுளம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ளது. பருவமழை காலங்களில் இந்த முருகமலையில் பெய்யும் மழை நீர் 100க்கும் மேற்பட்ட ஓடைகள் வழியாக தெற்கு நோக்கி செல்கிறது. இந்த நீர்வழித்தட ஓடைகளை மறித்து குறுக்கே, தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம், தமிழ்நாடு தரிசுநில மேம்பாட்டுத்திட்டம், பொதுப்பணித்துறை வாரியம், கிராம ஊராட்சிகளின் மூலம் 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 100க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாய பணிகள் தொடங்கப்பட்டது. இந்த தடுப்பணைகள் கட்டிய பின் விளைநிலங்களில் அதிகளவு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் தடுப்பணைகளில் படிப்படியாக மண் மேவ தொடங்கியது. இதனால் நீர் தேக்க அளவு குறைந்துகொண்டே சென்றது. தற்போது பருவமழை காலங்களில் ஓடைகளில் வரும் தண்ணீர் தடுப்பணைகளில் தேங்காமல் பயனற்று போனது.
இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மீண்டும் மானாவாரி நிலங்களாக மாற தொடங்கியுள்ளது. எனவே தடுப்பனைகளை தூர்வாரி, பராமரிப்பு பணிகள் செய்து மீண்டும் நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முருகமலை அடிவாரப்பகுதியில் விளைநிலங்களை மேம்படுத்த புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். தேவதானப்பட்டி முருகமலை அடிவாரப்பகுதியில் 10 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இந்த இடங்களில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடைகள் செல்கிறது. இதில் சில இடங்களில் ஏற்கனவே தடுப்பணைகள் கட்டப்பட்டு, தற்போது பயனற்று கிடக்கிறது. தடுப்பணைகள் இல்லாத இடங்களில் ஓடைகளின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சில்வார்பட்டி கிராம தரிசு நில மேம்பாட்டு திட்ட விவசாய குழுவின் பொறுப்பாளர் முத்துக்காமாட்சி கூறுகையில், தற்போது தமிழக அரசு விவசாயிகளின் பிரச்சனைகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. விவசாயிகளின் தேவைகளை அதிகாரிகள் மூலம் கள ஆய்வு நடத்தி, முடிந்தவரை நிவர்த்தி செய்து, பொருளாதார ரீதியில் உயர்த்த கடுமையாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தை படுத்துதல், புதிய தொழில்நுட்ப பயிற்சிகள், விவசாய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் என சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேவதானப்பட்டி முருகமலை அடிவாரப்பகுதிகளில் உள்ள மானாவாரி விளை நிலங்களை புஞ்சை தோட்டங்களாக மாற்ற ஓடைகளின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றார். இதன் மூலம் தரிசுகளாக இருக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயம் செழிக்கும் என்றார்.