வெயில் தாக்கம் அதிகரிப்பு: கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது
பெரியகுளம்: வெயிலின் தாக்கம் அதிகரித்து கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்த தண்ணீர் இல்லாததால், ஏமாற்றமடைந்து சென்றனர்.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியில் பாம்பார்புரம், வட்டக்காணல், கும்பக்கரை நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.
கடந்தாண்டு செப்., முதல் மழையால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்தது. அக்டோபர் முதல் ஜனவரி வரை 5 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக ஜன.19ல் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கினால் அருவியில் குளித்து கொண்டிருந்த நுாற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
மழை குறைவு
பிப்ரவரி முதல் மார்ச் முதல் வாரம் வரை மழையில்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அருவிக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக எதிர்பார்ப்புடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் வந்த குறைந்த அளவு தண்ணீரில் குளித்தனர்.
அருவியின் மேற்பகுதி நீரோடையில் சிறிதளவு தண்ணீரில் ஏமாற்றத்துடன் குளித்துச் சென்றனர்.