தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.32.04 லட்சம் மோசடி: ‛எஸ் கேப் ‘ஆன தம்பதி மீது வழக்கு
தேனி:தேனி மாவட்டம் போடியில் தீபாவளி, ஏலச்சீட்டுக்கள் நடத்தி ரூ.32.4 லட்சம் மோசடி செய்த கோபால கிருஷ்ணன் – சுதா தம்பதி மீது மாவட்டகுற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
போடி கே.எம்.எஸ்., லே அவுட் தெருவை சேர்ந்தவர் வீரபத்திரன் 39. இவரது வீட்டில் கீழ் தளத்தில் அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அவரது மனைவி சுதா வசித்தனர். இவர்கள் 18 ஆண்டுகளாக பதிவு செய்யாமல் சிறுசேமிப்பு நிதி திட்டம் நடத்தினர். அதில் ரூ.1 லட்சம் ஏலச்சீட்டும்,தீபாவளி சீட்டுத்திட்டம் நடத்தினர். வீரபத்திரனிடம், தாங்கள் நடத்தும் ஏலச்சீட்டில் இணைந்தால் கமிஷன் தொகை எடுக்காமல், உடனே பணம் வழங்கிடுவோம் என ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி வீரபத்திரன் ஏழு ஏலச்சீட்டுகளில் இணைந்து ரூ.6.79 லட்சமும், 20 தீபாவளி சீட்டு திட்டங்களில் ரூ.1.24 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சத்து 3ஆயிரம் செலுத்தினார்.
முதலீடு முதிர்வடைந்தபோது பணம் வழங்காமல் காலதாமதம் செய்தனர். 2024 டிச.1ல் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகினர். இதுவரைவீடு திரும்ப வில்லை. அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளது. இத்தம்பதி மேலும் 8 பேரிடம் ரூ. 24 லட்சம் பெற்று தலைமறைவாகியதும் மொத்தம் ரூ.32.4 லட்சம் மோசடி செய்ததும் தெரிந்தது. தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் வீரபத்திரன் புகார் அளித்தார். அவரது உத்தரவில் மாவட்டகுற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் ஆகியோர் கோபால கிருஷ்ணன், சுதாவை தேடி வருகின்றனர்.