குமுளி மலைப்பாதையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
கூடலுார்: குமுளி மலைப்பாதையில் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயம் உள்ளது.
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும்.
தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம். இந்த மலைப்பாதையில் மாதா கோயில் வளைவு, ராட்சதக் குழாயின் மேற்புறம் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் உள்ளிட்டவைகள் லோயர்கேம்ப், கூடலுார் கம்பம் ஆகிய பகுதிகளை கண்டு ரசிப்பதற்கு ‘வியூ பாயின்ட்’ ஆக உள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு இயற்கை அழகை கண்டு ரசித்தும் போட்டோ எடுத்தும் செல்கின்றனர். அந்த நேரத்தில் வழக்கமாக வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.
மேலும் ஆபத்தான வளைவுகளில் ஏற முடியாமல் திணறி வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. அதனால் ஆபத்து நிறைந்த மலைப்பாதையில் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்த தடை விதிப்பதுடன், வனத்துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.