கடந்தாண்டு அதிகரித்த விபத்துக்களை குறைக்க நடவடிக்கை: 2024ல் 1330 விபத்துகளில் 408 பேர் உயிரிழப்பு
தேனி: மாவட்டத்தின் ஐந்து போலீஸ் சப் டிவிஷன் பகுதிகளில் கடந்த 2023ல் நடந்த 1174 விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2024ல் 56 விபத்துக்கள் அதிகரித்து மொத்தம் 1230 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் மொத்தம் 408 பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட கூடுதலாக 78 பேர் இறந்துள்ளனர். வருங்காலங்களில் விபத்துக்களை தவிர்க்க 2025 முதல் 2 மாதங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து போலீசார் சார்பிலும் தீவிர விபத்து தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்து விபத்துக்கள் குறைந்துள்ளன.
தேனி, உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மாவட்ட போக்குவரத்து போலீசார் சார்பில் 5 சப் டிவிஷன் பகுதிகள், திண்டுக்கல் – குமுளி பைபாஸ் ரோடு, மதுரை ரோடு ஆண்டிபட்டி கணவாய் வரையும், தேனி பெரியகுளம் அன்னஞ்சி பைபாஸ் ரோடு, அன்னஞ்சி – கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட், அரண்மனைப்புதுார் விலக்கு பைபாஸ் ரோடுகள் உள்ளன. இதுதவிர நகராட்சி, உள்ளாட்சிப் பகுதிகளில் அதிகளவில் விதிமீறல்களால் விபத்துக்கள் நடக்கின்றன. 2 ஆண்டுகளில் 738 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்காக விபத்துக்கள் நடக்கும் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்த அதிகாரிகள், சென்டர் மீடியன்கள், இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் இடங்கள், ஒளிரும் ஸ்டிக்கர்கள், விளக்குகள் தேவைப்படும் இடங்கள் குறித்தும், விபத்து நடப்பதற்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். இதில் போக்குவரத்து போலீசார் எங்கெல்லாம் கண்காணிக்க வேண்டும் என ஆய்வு செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதனால் 2025 ஜனவரி, பிப்ரவரியில் விபத்துக்களின் கடந்தாண்டு இம்மாதங்களின் சாராசரியை காட்டிலும் குறைந்து உள்ளன.
2 மாதங்களில் குறைந்த விபத்துகள்
மாவட்டத்தில கடந்த 2023 ஜனவரியில் 27 விபத்துகளில் 27 பேர் பாலியாகி இருந்தனர். பிப்ரவரியில் 19 விபத்துகளில் 19 பேர் பலியாகினர். 2024ல் ஜனவரியில் 36 விபத்துகளில் 37 பேர் இறந்துள்ளனர். 2025 ஜனவரியில் 27 விபத்துகளில் 27 பேர் இறந்துள்ளனர். பிப்ரவரியில் 15 விபத்துகளில் 17 பேர் இறந்துள்ளனர். இது கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் குறைவாகும்.