குறைந்த விலையில் தங்க நாணயம் என கூறி ரூ.5.50 லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு
தேனி:தேனி மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்த ஈஸ்வரனிடம் குறைந்த விலையில் தங்க நாணயம் தருவதாக கூறி ரூ. 5.50 லட்சம் மோசடி செய்த பொம்மையகவுண்டன்பட்டி ஆண்டவர், சிவா, சிவனேசன் ஆகிய மூவர் மீது அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ஈஸ்வரன் 32, டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். இவரது உறவினர் விஷால். இவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் குறைந்த விலையில் தங்கநாணயம் வழங்குவதாகவும் ரூ. 50 ஆயிரத்துடன் போடி பை பாஸ் ரோட்டிற்கு வருமாறும் கூறினார். இதனை நம்பி அங்கு சென்ற ஈஸ்வரன், விஷாலிடம் பணத்தை பெற்று 700 மி.கிராம் எடையுள்ள இரு தங்க நாணயத்தை ஆண்டவர், சிவா, சிவனேசன் கொடுத்தனர். மேலும் ரூ. 5 லட்சம் வழங்கினால் 250 தங்க நாணயங்கள் வழங்குவதாக தெரிவித்தனர்.
இதனை நம்பி இருவரும் கர்நாடக மாநிலம் ஹரப்பணஹள்ளி சென்றனர். அங்கு இருவரிடமுமிருந்து ரூ. 5.5 லட்சத்தை பறித்து கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து ஆண்டவர் உள்ளிட்ட மூவரும் தப்பினர். ஈஸ்வரன் புகாரில் மூவர் மீதும் அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் குறைந்த விலைக்கு நாணயம் வழங்குவதாக கூறி ரூ.7 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆண்டவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.