மூணாறு ஓடையில் குப்பை வீசிய பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
மூணாறு: மூணாறில் ஓடையில் குப்பையை வீசிய பெண்ணுக்கு ஊராட்சி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
மூணாறில் ஊராட்சி தலைமையில் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தூய்மை பணிகள் கடந்த இரண்டு வாரங்களாக நடந்தது.
அதில் 55 டன் வரை குப்பை உள்பட கழிவுகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பிறகு நகரில் ஆற்றோரங்கள், பொது இடங்கள் ஆகியவை சற்று தூய்மை அடைந்தன.
அதனை தொடர்ந்து பின்பற்றும் வகையில் குப்பைகளை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள தபால் ஊழியர்கள் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் அருகில் உள்ள ஓடையில் குப்பைகளை வீசினார்.
அச்சம்பவம் ஊராட்சி சார்பில் பொறுத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.
அந்த பதிவை வைத்து பெண்ணை அடையாளம் கண்ட ஊராட்சி நிர்வாகம் அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
அத்தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.