Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

கேரளாவில் உடல் உறுப்புகள் தானம் கிடைக்காமல் உயிர் பலிகள் அதிகரித்து வருகின்றன. அதனை தவிர்த்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரியில் என்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கேரள கல்லீரல் அறக்கட்டளை தலைமையில் உடல் உறுப்புகள் தானம் பதிவு முகாம் நடந்தது. அதில் இறப்புக்கு பின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக ஹேமதர்ஷினி பதிவு செய்தார். அதற்கு எழுத்து பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகு உடல் உறுப்புகள் தானம் குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் துணிச்சலான முடிவை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். தமிழரான மாணவி ஹேமதர்ஷினி மூணாறு பகுதியில் முதன்முதலாக உடல் உறுப்புகள் தானம் செய்ய பதிவு செய்து முன்மாதிரியானதுடன் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஆண்டிபட்டி; வைகை அணை நீர் தேக்கத்தில் சில நாட்களாக பச்சை பாசி படலம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் நீரில் மிதக்கும் பாசி படலத்தால் பாதிப்பில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கும். தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் அணையில் தேக்கப்பட்டு, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீருக்காக ஆண்டு முழுதும் பயன்படுத்தப்படுகிறது.

வைகை அணை நீரில் வளரும் மீன்கள் ஒப்பந்ததாரர் மூலம் பிடிக்கப்பட்டு ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வைகை அணை நீர்த்தேக்கத்தில் முழு அளவான 71 அடி நீர் தேங்கினால் நீர்த்தேக்கம் 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்திருக்கும். மழை இன்மையால் வைகை அணைக்கான நீர் வரத்து சில வாரங்களாக வினாடிக்கு 100 கன அடிக்கும் குறைவாகவே உள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 58.99 அடியாக உள்ளது.

இந்நிலையில் அணை நீர்த்தேக்கத்தில் சில நாட்களாக பச்சை பாசி படலம் மிதக்கிறது.

பாசி படலத்தால் தண்ணீருக்கும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

அணை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கோடையில் அணையில் நீர் இருப்பு குறையும். நீர்வரத்தும் குறைவதால் வழக்கமாக பாசி படலம் ஏற்படும்.

ஒவ்வொரு மாதமும் நீர் தேக்கம், அணை சுரங்கத்தில் கசியும் நீர், அணையில் இருந்து வெளியேறி ஆற்றில் செல்லும் நீர் ஆகியவற்றின் மாதிரி எடுத்து சென்னை பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்படுகிறது.

தண்ணீருக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, தன்மை மாறினாலோ சோதனையில் தெரிந்து விடும். தற்போது அணை நீரில் மிதக்கும் பச்சை பாசி படலத்தால் பாதிப்பில்லை என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *