கம்பெனி உரிமையாளரை தாக்கி பணம் பறித்த 6 பேர் மீது வழக்கு
ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் கந்தநாதன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் 40, பெட் பாட்டில் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.
இக்கம்பெனியில் 2 மாதத்திற்கு முன்பு வருஷநாடு தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த சுமன், ஈஸ்வரன், தர்மா, ராஜேஸ், முத்திஸ், சதீஷ் ஆகிய 6 பேரும் வேலைக்கு சேர்ந்து அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். கம்பெனியில் பாட்டில் தயாரிக்கும் போது கழிவு பாட்டில்களை சரியான முறையில் எடுக்காததால் வாடிக்கையாளர்கள் பாட்டில்களை சரியான முறையில் அனுப்பும்படி கம்பெனியில் தெரிவித்துள்ளனர். பணியில் அலட்சியமாக இருந்த தொழிலாளர்களை முத்துராஜ் கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆறு பேரும் ஒன்று சேர்ந்து முத்துராஜை தாக்கி அவர் வசம் இருந்த பணம் ரூ.6000த்தை பறித்துள்ளனர். அவரது மொபைல் போனிலிருந்து ஜிபே மூலம் சுமன் வங்கி கணக்கிற்கு ரூ.30 ஆயிரத்தை மாற்றச் செய்துள்ளனர். அவரை அங்கேயே வேஷ்டியால் கட்டி போட்டுவிட்டு வெளியில் இருந்த இருசக்கர வாகனத்தையும் திருடி சென்று விட்டனர். இது குறித்து முத்துராஜ் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.