ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை
ஊராட்சிகளில் சுகாதாரப் பிரிவில் துாய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. பல ஊராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். பணிபுரியும் சிலரும் வயதானவர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவு என்பதால் பணி புரிவதற்கு ஆர்வம் இன்றி உள்ளனர்.
பல ஆண்டுகளாக துாய்மைப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளதால் ஊராட்சி பகுதியில் அள்ளப்படாத குப்பை, அகற்றப்படாத சாக்கடை கழிவுகள் அதிகரித்து துப்புரவு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதால் சில ஊராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் துாய்மைப் பணியாளர்கள் நியமனம் செய்து, துப்புரவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதே நிலை நகராட்சி, பேரூராட்சிகளிலும் நீடித்து வருகிறது.
மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளை சுகாதாரமான முறையில் மாற்றி அமைத்திட துாய்மைப் பணியாளர்களுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.